மத்திய அரசின் பொருளாதார கொள்கையால் திருப்பூர், கோவை நகரங்கள் நசிந்துவிட்டன – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த படியூரில் மேற்கு மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் பொருளாதார கொள்கையால் திருப்பூர், கோவை நகரங்கள் நசிந்துவிட்டன. டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர், டல் சிட்டியாக மாறிவிட்டது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை நாம் வழங்கினால், மினிமம் பேலன்ஸ் இல்லை எனச் சொல்லி, கொள்ளையடிக்கும் அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது. பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழகத்தில் உள்ள குடும்பத்திற்கு மாதம்தோறும் 3 ஆயிரம் வரை வழங்கி வருகிறோம்.

நீங்கள் தேடிப் போற ஒவ்வொரு வீட்டுலயும், நம்ம அரசோட திட்டங்களால பயனடைந்தவர்கள் இருப்பார்கள். பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு வாக்குச்சாவடி முகவர்களே காரணம். வாக்களைர்களை சந்தித்து அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். தன்னுடைய ஆட்சியின் சாதனை என சொல்வதற்கு பிரதமர் மோடியிடம் எதுவும் இல்லாத காரணத்தால், மகளிர் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து கணக்கு காட்ட பார்க்கிறார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது. விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியையாவது பிரதமர் மோடி நிறைவேற்றினாரா ? கருப்பு பணத்தை மீட்டு மக்களுக்கு தருவோம் என்றனர்.. தந்தார்களா ?

அதிமுகவும், பாஜகவும் வெளியில் அடித்துக்கொள்வது போல் நடித்து உள்ளுக்குள் நட்பாக இருக்கின்றனர். போடு தோப்புக்கரணம்னு பாஜக சொன்னால் இந்தா எண்ணிக்கோன்னு சொல்லிட்டே அதிமுகவினர் தோப்புக்கரணம் போடுவார்கள். அதிமுகவை பயமுறுத்தி கூட்டணியில் வைத்துள்ளது பாஜக. ஊழல் வழக்கு பயம் காரணமாகவே அமித்ஷாவை ஈபிஎஸ் சந்தித்தார்.

ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருகிறேன்னு என்று கூறிவிட்டு, நம்முடைய பட்டதாரி இளஞர்களை பகோடா விற்கச் சொல்கிறார் பிரதமர் மோடி. பக்கோடா விற்க சொல்வதுதான் வேலை வாய்ப்பிற்காக பிரதமர் மோடி அளிக்கும் பதிலா ? திமுக அரசு செய்த சாதனைகளை சுட்டிக்காட்டி வாக்கு சேகரிக்க வேண்டும். உங்களை நம்பியே 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என கூறுகிறேன். தேர்தலில் வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு செயல்பட வேண்டும். வாக்காளர்களின் தேவைகளை கண்டறிந்து நிறைவேற்ற முகவர்கள் உதவ வேண்டும். நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news