மத்திய அரசின் NCERT பாடத்திட்டத்தில் இருந்த முகலாயர்கள், டெல்லி சுல்தான்களின் வரலாறு நீக்கம்!

மத்திய அரசின் NCERT, 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்திலிருந்து முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்களின் வரலாறு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

அவற்றிற்குப் பதிலாக, மகதம், மௌரியர்கள், சாதவாகனர்கள் மற்றும் சுங்கர்கள் போன்ற பண்டைய இந்திய வம்சங்களைப் பற்றிய புதிய அத்தியாயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் புதிய புத்தகங்கள் தேசிய கல்விக் கொள்கை (NEP)-2020 மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCF)-2023 ஆகியவற்றின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளன.

‘எக்ஸ்ப்ளோரிங் சொசைட்டி: இந்தியா அண்ட் பியாண்ட், பாகம்-1’ என்ற தலைப்பிலான புதிய சமூக அறிவியல் புத்தகம், உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் சமீபத்தில் நடந்த மகா கும்பமேளா மற்றும் மேக் இன் இந்தியா மற்றும் பேட்டி பச்சாவ்-பேட்டி பதாவோ போன்ற மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய குறிப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

‘பூமி எவ்வாறு புனிதமாகிறது’ என்ற அத்தியாயம், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து மதங்களாலும் புனிதமாகக் கருதப்படும் இடங்கள் மற்றும் புனித யாத்திரைகள் குறித்த குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 12 ஜோதிர்லிங்கங்கள், சார்தாம் யாத்திரை மற்றும் சக்திபீடங்கள் உள்ளிட்ட புனிதமான புவியியல் இடங்களின் விவரங்கள் அடங்கும். இதேபோல், ஜனபதா, சாம்ராஜ், ஆதிராஜா, ராஜாதிராஜா போன்ற சமஸ்கிருத வார்த்தைகள் பல்வேறு அத்தியாயங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

முன்னதாக 2022-23 ஆம் ஆண்டில் முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் தொடர்பான பிரிவுகளை NCERT வெகுவாக குறைத்தது. துக்ளக்குகள், கில்ஜிகள் மற்றும் லோடி ஆகியோரின் ஆட்சிக்கால விவரங்களுடன், அவர்களின் சாதனைகள் அடங்கிய இரண்டு பக்க அட்டவணை சேர்க்கப்பட்டுள்ளது. இப்போது, அவர்களைப் பற்றிய அனைத்து விவரங்களும் புதிய புத்தகத்திலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன.

“இவை வயதுக்கு ஏற்ற உலகக் கண்ணோட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன” என்று NCERT இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானி தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools