மத்திய பிரதேசத்தில் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது

230 சட்டசபை தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக கட்சியின் முக்கிய தலைவரான ஜோதிர் ஆதித்யா சிந்தியா போர்க்கொடினார்.

அவருக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவியில் இருந்து விலகினர்.

இதையடுத்து, ஜோதிர் ஆதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். அவர்களை தொடர்ந்து மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர்.

இதனால், மத்தியபிரதேச காங்கிரஸ் அரசு கவிழ்ந்து சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியை கைப்பற்றியது. இதன் விளைவாக ஏற்கனவே காலியாக இருந்த 3 இடங்களை சேர்த்து மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காலியாக உள்ள 28 தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், இழந்த ஆட்சியை மீட்க காங்கிரசும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை வாக்குச்சாவடியில் செலுத்தி வருகின்றனர்.

இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

மத்தியபிரதேசத்தில் தற்போது பாஜக எம்.எல்.ஏ.க்களின் பலம் 107 ஆக உள்ளது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக இன்னும் 9 தொகுதிகள் வெற்றிபெற வேண்டியதுள்ளது.

அதேபோல், 88 எம்.எல்.ஏ.க்களை தங்கள் கைவசம் வைத்துள்ள காங்கிரஸ் இழந்த ஆட்சியை மீண்டும் பெற போட்டியிடும் 28 தொகுதிகளிலும் வென்றாக வேண்டும் அல்லது குறைந்தது 21 தொகுதிகளில் வெற்றிபெற்று பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று
ஆட்சியமைக்கலாம்.

மத்தியபிரதேச இடைத்தேர்தலையும் சேர்ந்து நாடு முழுவதும் இன்று 56 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools