X

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் மரணம்!

திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் மாணவர்களில் ஒருவர் நெல் ஜெயராமன். இவர், 169 பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட பெருமைக்கு உரியவர். பாரம்பரிய நெல் விதைகளை அழிவிலிருத்து காத்த அவர், புற்று நோயால் பாதிக்கப்பட்டுவந்தாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்த அவர் பின்னர் நெல் வகைகளைக் காப்பாற்ற களம் இறங்கினார். ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல்வகைகளை பிரபலப்படுத்தியிருந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தநிலையில் இன்று காலை காலமானார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனை பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

அவருக்கு பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள், திரைப்பட கலைஞர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவி செய்தனர்.

முன்னதாக முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்த 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் காமராஜ், அவரது குடும்பத்தாரிடம் வழங்கினார்.

இந்நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நெல்ஜெயராமன் இறந்ததை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.