X

மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்தின் அவசர சந்திப்பு!

அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், அதற்கான அடித்தளத்தை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். முதல்கட்டமாக ரசிகர் மன்றங்களை, ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். உறுப்பினர் சேர்க்கை முடிந்த பின்னர், மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆனால், தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில், ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி பெயர் தொடர்பான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. அடுத்த சந்திப்பில் நிச்சயம் கட்சி பெயரை அறிவித்து, அரசியல் பணிகளை தீவிரப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

இந்நிலையில், ரஜினிகாந்த் இன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார். இதில் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த சந்திப்பின்போது அரசியல் கட்சி பெயர் முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கின்றனர்.

சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என ரஜினிகாந்த் கூறியிருக்கும் நிலையில், இன்றைய ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.