மின் இணைப்பு வழங்கியதும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் – ஸ்டெர்லைட் ஆலை அறிவிப்பு

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இருக்கும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க அனுமதி அளித்து தமிழக அரசு சார்பில் கடந்த 29-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் கண்காணிப்பு குழுவும் அமைத்து அரசு உத்தரவிட்டது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, தேவையான அனுமதிகளை வழங்கினர். மேலும், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின் இணைப்பு வழங்குவது தொடர்பாகவும் ஆய்வுகளை நடத்தினர். ஆனால், இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் தேவையான அனைத்து முன் இயக்க சோதனைகளும் செய்யப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளது. மின் இணைப்பு கொடுக்கப்பட்டதும் உடனடியாக ஆக்சிஜன் உற்பத்திக்கான பணிகளை தொடங்க தயாராக இருக்கிறோம்’ என்று கூறப்பட்டு உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools