X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை செல்கிறார்

சிவகங்கை, புதுக்கோட்டை பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை செல்கிறார். இன்று மாலை 4 மணிக்கு மேல் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்டு செல்லும் முதலமைச்சர், அங்கு கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தை பார்வையிடுகிறார்.

இன்று இரவு மதுரையில் அவர் தங்குகிறார். நாளை (புதன்கிழமை) மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக சிவகங்கைக்கு செல்கிறார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோட்டைவேங்கைப்பட்டி கிராமத்தில் 100 வீடுகளை கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு, ஏற்கனவே முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார்.

அதைத்தொடர்ந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்கு வருகிறார். புதுக்கோட்டையிலும் நாளை மாலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதலமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு திருச்சி செல்லும் முதலமைச்சர் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.