முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார் – பிரதமர், ஜனாதிபதியை சந்திக்கிறார்

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28-ம் தேதி முதல் இம்மாதம் 10-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியை மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருந்தோம்பலும், சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு பண்புகள் ஆகும். தொடர்ச்சியாக உங்களது ஆதரவையும் இது போன்ற இன்னும் பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி செல்கிறார். பிரதமர் மோடியை நாளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளார். தமிழகத்திற்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். அந்த மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்.

மேலும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools