முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 30 ஆம் தேதி பசும்பொன் செல்கிறார்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா ஆண்டு தோறும் அக்டோபர் 30-ந் தேதியன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறும். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்பட பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார்கள்.

அந்த வகையில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் பங்கேற்க வருகிற 30-ந்தேதி பசும்பொன் செல்கிறார்.

இதற்காக சென்னையில் இருந்து 29-ந் தேதி காலையில் விமானம் மூலம் மதுரை சென்றடைகிறார். மதுரையில் அன்று இரவு தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 30-ந்தேதி காலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அதன் பிறகு காரில் பசும்பொன் கிராமம் சென்று முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்துகிறார். அவருடன் அமைச்சர்களும் மரியாதை செலுத்துகின்றனர். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மதுரை வந்து 30-ந்தேதி மதியம் 2.45 மணிக்கு சென்னை திரும்புகிறார். முதலமைச்சர் பசும்பொன் செல்வதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news