X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்ரித் பண்டிகை வாழ்த்து

பக்ரீத் பண்டிகையையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தியாக பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளை இதயபூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

“அனைவரும் இன்புற்றிருக்கவேண்டும்; அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திடவேண்டும்” என்ற உயரிய கோட்பாடுகள் இரண்டும் இஸ்லாமிய மக்களின் கண்ணின் மணிகளாக என்றும் இருந்து வருகின்றன.

நபிகள் நாயகம் அளித்த போதனைகள், தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் கடைப்பிடிக்கவேண்டிய உன்னதமான நோக்கங்கள் என்பதை உணர்ந்துள்ள அவர்கள், அதன் வழி நின்று-அடி பிறழாமல் பின்பற்றி இந்த பக்ரீத் பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது.

“ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகளுக்கு, பிறகு நண்பர்களுக்கு, அடுத்துத்தான் தங்களுக்கு” என்ற கொள்கையின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து, பயன்படுத்திக்கொள்ளும் பண்பையும், மனித நேயத்தையும் இஸ்லாமிய பெருமக்கள் வெளிப்படுத்தும் விதமாக, பக்ரீத் பண்டிகை நாளன்று ஏழை-எளிய மக்களுக்கு உதவிகளை வாரி வழங்குகிறார்கள்.

நபிகள் நாயகத்தின் போதனைகளுக்கு சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் இந்த தியாக பெருநாளை மகிழ்ச்சியுடனும்; கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றியும், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டும் கொண்டாடிடவேண்டும் என்று வேண்டி, பக்ரீத் பெருநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.