மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் – மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற மாநில ஆணையம் பரிந்துரை

முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. உதயசூரியன் வடிவத்தில் நினைவிடத்தின் முகப்பு அமைகிறது.

நினைவிடத்தின் பின்புறம் 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா வடிவிலான நினைவு சின்னம் அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது. கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் பாலத்தில் நடந்து சென்று பேனா நினைவு சின்னத்தை அடையும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

பாலத்தில் நடந்து செல்லும் பகுதி முழுவதும் கண்ணாடி தரையாக அமைக்கப்படும். இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டரும் அமையும் வகையில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர். கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க ரூ.80 கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளனர். 134 அடி உயரத்துக்கு இந்த பேனா நினைவு சின்னம் அமைய உள்ளது.

இந்த திட்டத்துக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்மொழிவுகள் பெறப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடலில் கட்டுமானங்கள் மேற்கொள்ள மாநில அளவில் அனுமதி வழங்கினால் மட்டும் போதாது என்பதால் மத்திய கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணைய அனுமதிக்கு அனுப்பி வைக்க மாநில ஆணையம் பரிந்துரைத்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools