ரஜினி, கமல் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த நடிகர் கார்த்தி

மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.௧௦௦ கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இப்படத்திற்கும் படத்தில் நடித்தவர்கள் பலருக்கும் திரைதுறையினர் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவியை தொலைப்பேசியில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியதாக நெகிழ்ச்சியுடன் அவர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் வல்லவராயன் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்த கார்த்தியை, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் பாராட்டியுள்ளனர். இதனை கார்த்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “ரஜினி சார், உங்களிடமிருந்து வந்த அழைப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மற்றவர்களின் பணிகளை பார்த்து நீங்கள் பாராட்டுவது எங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்ததாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “கமல் சார், நீங்கள் எப்பொழுதும் சினிமாவில் பெரிய இலக்குகளை அடைய, உயர்ந்த தரத்தை அமைக்க எங்களுக்கு தூண்டுதலாக இருந்துள்ளீர்கள். ஆனால் அதைவிட முக்கியமாக ஒருவரையொருவர் நேசிக்கவும், மதிக்கவும், அதை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை இது போன்ற தருணங்களில் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். மிகுந்த அன்பும் மரியாதையுடன் கார்த்தி” என குறிப்பிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools