ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஐரோப்பிய யூனியன் நாடுகள் முடிவு

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 97-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. மேலும் ரஷியாவின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இருப்பினும் ஐரோப்பாவின் எரிபொருள் தேவை பெரும்பாலும் ரஷியாவை நம்பியே உள்ளது. ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு தேவையான 35 சதவிகிதத்திற்கு அதிகமான எரிபொருட்களை ரஷியாவிடமிருந்தே பெறுகின்றன. இதனால், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகள் ரஷியா மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த உக்ரைன், மேற்கத்திய நாடுகள் விளையாடுவதை நிறுத்திவிட்டு, முழு தடைகளை விதிக்க வேண்டும் என கேட்டிருந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷியாவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெய்யில் 90 சதவிகிதத்தை நிறுத்த ஐரோப்பிய யூனியன் நாடுகள் முடிவு செய்துள்ளன. பெல்ஜியத்தில் இன்று நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு தொடர்பான அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் ஐரோப்பிய சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools