X

ராகவா லாரன்ஸை வைத்து படம் இயக்கும் வெங்கட் பிரபு

தமிழில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான சென்னை 600028 திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வெங்கட் பிரபு. இப்படம் வெற்றி அடைந்தது. இதை அடுத்து, கோவா, சரோஜா என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த வெங்கட் பிரபு, பின்னர் அஜித்தை வைத்து மங்காத்தா எனும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்து முன்னணி இயக்குனரானார்.

இதை தொடர்ந்து முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி ஆகியோரது படங்களை இயக்கிய வெங்கட் பிரபு, சிம்புவை வைத்து மாநாடு எனும் படத்தை இயக்க இருந்தார். இருப்பினும் சில பிரச்சனைகள் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனதால், தற்போது காஜல் அகர்வாலை வைத்து வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து இயக்குனர் வெங்கட் பிரபு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் லாரன்ஸ் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள வெங்கட் பிரபு, கடவுளின் அருளால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். சிம்புவின் மாநாடு படத்திற்கு பிறகு, இந்த படத்திற்கான பணியை வெங்கட் பிரபு தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.