X

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வடக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (11-ந் தேதி) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி நாளை உருவாகிறது. அது 12-ந் தேதி மேலும் வலுவடைய உள்ளது. இது அடுத்தடுத்து வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு இல்லை.

இதன் காரணமாக அந்தமான் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்திலும் மத்திய வங்க கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள், வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

அதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். மேலும் இதன் காரணமாக தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை. ஓரிரு இடங்களில் லேசாக மழை பெய்யக்கூடும்.

மேலும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.