வங்காளதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் – வலுவான நிலையில் பாகிஸ்தான்

வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் நாள் முடிவில், பாகிஸ்தான் அணி 57 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அசார் அலி 36 ரன்னும், கேப்டன் பாபர் அசாம் 60 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளிலும் மழையால் ஆட்டம் கடுமையாக பாதிப்பு அடைந்தது. பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்திருந்தது. அசார் அலி 52 ரன்னுடனும், பாபர் அசாம் 71 ரன்னிடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.

இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அசார் அலி 56 ரன்னிலும், பாபர் அசாம் 76 ரன்னிலும் அவுட்டாகினர்.

அடுத்து இறங்கிய பவாத் ஆலம், ரிஸ்வான் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதமடித்தனர். இந்த ஜோடி 103 ரன்கள் சேர்த்தது.

பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 300 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. ஆலம் 50 ரன்னும், ரிஸ்வான் 53 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

வங்காளதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, வங்காளதேசம் முதல் இன்னிங்சை ஆடியது. பாகிஸ்தான் அணியின் சஜித் கான் துல்லியமாக பந்துவீசினார். இவரது பந்து வீச்சில் நிலைகுலைந்த வங்காளதேசம் விரைவில் விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

நான்காம் நாள் முடிவில் வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. ஷகிப் அல் ஹசன் 23 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

பாகிஸ்தான் சார்பில் சஜித் கான் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools