வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்திய விவகாரம் – கரூர் மாநகராட்சி கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது

தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்கள், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கரூரில் நடந்த சோதனையின் போது வருமான வரித்துறை அதிகாரிகளை தி.மு.க.வினர் தடுத்தனர். இதனால் பிரச்சனை உருவானது. தி.மு.க.வினரின் எதிர்ப்பு காரணமாக முதல் நாளில் கரூரில் வருமான வரி சோதனை பாதியில் நிறுத்தப்பட்டது. கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் சோதனையிடச் சென்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

இதனால் அங்கு சோதனைக்குச் சென்ற அதிகாரிகள் பாதுகாப்பு கருதி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது போல் ராயனூரிலும் அதிகாரிகளை தி.மு.க.வினர் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, அந்த புகாரின் அடிப்படையில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த 6 பேரும், ராயனூர் சம்பவத்தில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை தடுத்த வழக்கு தொடர்பாக கரூர் மாநகராட்சி கவுன்சிலர் லாரன்ஸ் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools