வாக்கு எண்ணிக்கை – வாக்குச் சாவடி முகவர்களை மையத்திற்குள் அனுப்பும் பணி தொடங்கியது

நமது நாட்டில் 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.

மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தொடர் ஓட்டம்போல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்டது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.
இந்த பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2-ந் தேதி முடிவடைந்ததால், அந்த 2 மாநிலங்களுக்கும் 2-ந் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.

இந்தநிலையில் நாடு முழுவதும் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முடிவடைந்துவிட்டதால், இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது. இதேபோல் ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன.

நாடு முழுவதும் 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாக்குச்சாவடி முகவர்களை மையத்திற்குள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடும் சோதனைக்கு பிறகே வாக்குச்சாவடி முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools