வாவர் பள்ளிவாசலுக்குள் நுழைய முயன்ற தமிழக பெண்கள் கைது!

திருப்பூரில் இருந்து சபரிமலை வாவர் பள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற தமிழகத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள வாவர் பள்ளி வாசலுக்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி கிடையாது. இந்த நிலையில் வாவர்சாமி பள்ளிவாசலுக்குள் நுழைய தமிழகத்தில் இருந்து சில பெண்கள் வருவதாக கேரள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், 3 பெண்கள் உட்பட 5 பேரை கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுசீலாதேவி, ரேவதி, காந்திமதி, திருப்பதி, முருகசாமி ஆகியோர் இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுப்ப, கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் கேரள அரசு, வாவர் பள்ளி வாசலுக்குள் செல்லவும் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது,

சபரிமைலையின் புனிதம் காக்கப்பட வேண்டும். சபரிமலை கோவிலுக்குள் 2 பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று வந்த நிலையில், மசூதிக்கு செல்ல பெண்களுக்கு ஏன் மறுப்பு தெரிவிக்கிறீர்கள். மசூதிக்குள் பெண்ணுரிமையை நிலைநாட்ட மறுப்பது ஏன்? பினராயி விஜயினின் இரட்டை வேடம் ஏன்? இந்துக்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஒருதலைபட்சமான இந்த நடிவடிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news