விக்ரம் லேண்டர் தடம் பதித்த பகுதிக்கு வைத்த சிவசக்தி பெயருக்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்

இந்திய விண்வெளி ஆராய்சி கழகத்தின் (இஸ்ரோ) சார்பில் நிலவை ஆராய்சி செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ந் தேதி சதீஷ்த வான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 1 மாதத்திற்கு பிறகு ஆகஸ்டு 23-ந் தேதி மாலை 6.04 மணிக்கு திட்டமிட்ட இடத்தை சென்றடைந்தது.

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவில் தென்துருவத்தில் தரை இறங்கி சாதனை புரிந்தது. மேலும் விக்ரம் லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவரும் வெற்றிகரமாக வெளியே வந்து ஆய்வில் ஈடுபட்டது. இந்த திட்டத்தின் மூலம் நிலவின் தென் துருவத்தின் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்த வெற்றியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பிரதமர் மோடி இஸ்ரோ மையத்திற்கு நேரில் சென்று விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரை இறங்கியதை குறிக்கும் வகையில் ஆகஸ்டு 23-ந் தேதியை தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.

மேலும், நிலவில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பகுதிக்கு ‘சிவசக்தி’ என்று பிரதமர் மோடி பெயர் சூட்டினார். சிவம் மனித குல நன்மைகளுக்கான தீர்வை கொண்டு இருக்கிறது. சக்தி அந்த தீர்வுகளை செயல் படுத்துவதற்குரிய ஆற்றலை வழங்குகிறது. இதன் காரணமாக சிவசக்தி என பெயரிட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி சூட்டிய சிவசக்தி பெயருக்கு சர்வேதேச விண்வெளி யூனியனின் கிரக அமைப்புகளுக்கான பெயரிடும் பணிக்குழு அங்கீகாரம் அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் அந்த இடம் இனி சிவசக்தி என்றே விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் அடையாளப்படுத்தப்படும். இது இந்தியாவிற்கு மிகப் பெரிய அங்கீகாரம் என்று கருதப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools