விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் குணமடைய பிரார்த்தனை செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்

உத்தர்காண்ட் சென்றிருந்த ரிஷப் பண்ட் சாலை மார்க்கமாக டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளார். அவர் சென்ற கார் ரூர்கி என்ற பகுதியை அடைந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. சாலையின் தடுப்பில் மோதிய அந்த கார், சுழன்றுக்கொண்டே சென்று இறுதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் சிக்கிய ரிஷப் பண்ட் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் ரிஷப் பண்ட்-க்கு கார் விபத்து என அறிந்தவுடன் பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் அவர் குணமடைய வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார். பண்ட் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் சாஹீன் ஷா அஃப்ரிடி, பண்ட் உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன், விரைவில் மீண்டு வா எனக்குறிப்பிட்டுள்ளார்.

இதே ஆல்ரவுண்டர் சதாப் கானும், ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிஃப் மாலிக், ” பண்ட்-ன் விபத்து குறித்து தற்போது தான் தெரியவந்தது. சீக்கிரமாக எழுந்து வாருங்கள் சகோதரரே, உங்களுக்காக நிறைய பிரார்த்தனைகளை செய்யப்போகிறேன் எனக்கூறியுள்ளார். முகமது ஹஃபீஸும் பண்ட்-க்காக பிரார்த்தனை செய்கிறேன் எனக்கூறினார்.

இதே போல முன்னாள் வீரர் ஹசன் அலி, ” ரிஷப் பண்ட்-க்கு எந்தவித பெரிய பாதிப்புகள் இருக்காது என நம்புகிறேன். நீங்கள் விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன். உங்களுடன் கடவுள் துணையாக நின்று சீக்கிரமாக குணப்படுத்துவார். களத்தில் மீண்டும் வாருங்கள், உங்களின் அதிரடியை காண வேண்டும் எனக்குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய வீரருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிரார்த்தனை செய்வது கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools