வெப்ப அலை அதிகரிப்பு – டெல்லியில் 20 பேர் பலி

வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கம் மிக தீவிரமாக உள்ளது.

பல இடங்களில் இயல்பு நிலையை விட 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது. இரவு நேரங்களிலும் வெப்பக் காற்று வீசி வருவதால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மே 27-ம் தேதி முதல் நேற்று வரை வெப்ப அலையில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர். இதில், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் 9 பேரும், ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் 9 பேரும், லோக் நாயக் மருத்துவமனையில் 2 பேரும் என மொத்தம் 20 பேர் பலியாகினர்.

வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 45-க்கும் மேற்பட்டோர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வட இந்தியாவில் தீவிர வெப்ப அலையின் தாக்கம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools