வேறு கட்சிக்கு மாற மாட்டோம் – உறுதிமொழி எடுத்துக்கொண்ட காங்கிரஸ் வேட்பாளர்கள்

கோவா, உத்தரகண்ட், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இதையடுத்து அரசியலில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கட்சி எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் வெவ்வேறு கட்சிகளுக்கு மாறி வருகின்றனர்.

கோவா மாநிலத்தை பொறுத்தவரை கடந்த 2017-ம் ஆண்டு 17-ஆக இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 15 பேர் கட்சி மாறியதால் 2-ஆக குறைந்துவிட்டது.

இந்நிலையில், கோவா தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் 36 வேட்பாளர்களும் வெற்றி பெற்ற பிறகு, அடுத்த 5 ஆண்டுகளுக்குக் காங்கிரஸ் கட்சியில் தான் இருக்க வேண்டும், வேறு கட்சிக்கு மாறக்கூடாது என காங்கிரஸ் உறுதிமொழி பெற்றுள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள இந்து கோயில், தேவாலயம், மசூதி ஆகிய இடங்களுக்கு சென்ற வேட்பாளர்கள், ‘எங்களுக்குப் போட்டியிட வாய்ப்பளித்த காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக இருப்போம் என்று கடவுள் காலடியில் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறோம். வென்ற பிறகு எந்த சூழ்நிலையிலும் கட்சி மாறமாட்டோம்’ என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதுகுறித்து முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் சட்டமன்ற தலைவருமான திகம்பர் காமத் கூறியதாவது:-

கோவா மக்கள் மத நல்லிணக்கத்திற்குப் பெயர் பெற்றவர்கள். கடவுளின் முன் 5 ஆண்டுகள் கட்சியில் ஒன்றாக இருப்போம் என்று உறுதிமொழி எடுத்துள்ளோம். இறைவன் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

கடந்த காலங்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சியை விட்டு சென்றதற்கு நிர்வாகம் மட்டும் பொறுப்பல்ல. பாஜக அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி ஆசை காட்டியது. அதனால் அவர்கள் கட்சி மாறினார்கள். இது மீண்டும் நடக்காது. எங்களை நம்பி வாக்களிக்கலாம் என கோவா மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்.

இவ்வாறு திகம்பர் காமத் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools