வேலூர், ஆம்பூர் மாவட்டங்களில் செயல்படும் தோல் தொழிற்சாலைகளில் இன்று 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பரிதா குழுமத்துக்கு பரிதா ஷூஸ், பரிதா லெதர் வார் உட்பட 11 துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன‌. இந்த குழுமம் ஷூ பெல்ட் பை உள்பட பல்வேறு தோல் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

சென்னை, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, புதுச்சேரி என பரிதா குழும தொழிற்சாலைகள் மற்றும் நிர்வாகிகளுக்கு சொந்தமான வீடு அலுவலகம் தொழிற்சாலை என 32 இடங்களில் நேற்றுமுன்தினம் காலை 8 மணி முதல் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

இதேபோல சென்னை நுங்கம்பாக்கத்தில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் கே.எச் இந்தியா குழுமத்திற்கு சொந்தமான தோல் தொழிற்சாலைகளிலும் நேற்றுமுன்தினம் காலை 8 மணி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் மேல் விஷாரம், வேலூர் பெருமுகை, ஆம்பூர் ஆகிய இடங்களில் இந்த குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகள் உள்ளன. இந்த 2 நிறுவனங்கள் தொடர்புடைய மொத்தம் 62 இடங்களில் இன்று 3-வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. பரிதா குரூப்பில் உள்ள தோல் தொழிற்சாலைகள், ஷூ கம்பெனியில் ஆண்டுக்கு ரூ.1600 கோடி ரூபாய் மதிப்பிலான வியாபாரங்கள் நடந்து வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி செலுத்திய விவரங்களை சேகரித்து வருகின்றனர். ஆம்பூர் பரிதா குழும நிறுவனங்களில் 20 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களை ஜெராக்ஸ் காப்பி எடுத்தனர். அலுவலகத்தில் இருந்த ஏற்றுமதி இறக்குமதி நிர்வாக மேலாளர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போன்று இந்தியா ஷூ, ஆற்காடு ஷூ, அஷ்டான் ஷூ, கம்பெனியில் ஜாப் ஒர்க் என்கிற பெயரில் ஆம்பூரை சுற்றியுள்ள பல்வேறு தனியார் ஷூ கம்பெனியில் ஜாப் ஒர்க் செய்து வந்த பரிதா குழுமத்தின் கணக்கு மற்றும் நிர்வாகம் செயல்பாடுகளை விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று 3-வது நாளாக தொடர்ந்து சோதனை நடந்து வருவதால் தொழிற்சாலை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools