வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் – டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று தொடங்குகிறார்கள்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகிறது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு வருகின்றனர்.

இந்த விவசாயிகளுடன் மத்திய அரசு 10-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. 3 புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால் இந்த பிரச்சினையில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதையொட்டி மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வெளியே தினந்தோறும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர்.

ஆனால் விவசாயிகளின் இந்த திட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி அளிக்கவில்லை. கொரோனாவை காரணம் காட்டி விவசாயிகளுக்கு இந்த போராட்டத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தங்கள் போராட்டக்களத்தை டெல்லி ஜந்தர் மந்தருக்கு மாற்ற விவசாயிகள் முடிவு செய்தனர். அதாவது வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இன்று (வியாழக்கிழமை) முதல் தினந்தோறும் ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என சம்யுக்தா கிசான் மோர்ச்சா முடிவு செய்துள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அமைதியான முறையில் இந்த போராட்டத்தை நடத்த உள்ளதாக விவசாய அமைப்பு தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த போராட்டத்துக்காக டெல்லி சிங்கு எல்லையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களில் விவசாயிகள் ஜந்தர் மந்தருக்கு செல்ல உள்ளனர். அங்கு ‘விவசாயி நாடாளுமன்றம்’ நிகழ்ச்சியை அவர்கள் நடத்துகிறார்கள்.

இதற்காக தினந்தோறும் 200 போராட்டக்காரர்கள் சிங்கு எல்லையில் இருந்து ஜந்தர் மந்தர் செல்ல உள்ளதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்தையொட்டி ஜந்தர் மந்தரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools