ஹிஜாப் உடை தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு – கர்நாடகாவில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். அவர்கள் வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் உடை) அணிந்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால் இரு தரப்பிடையே பதற்றம் ஏற்பட்டது.

இந்த பிரச்சினை தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்குகளின் வாதம் நிறைவு பெற்ற நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,இன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வெளிப்புறத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும், அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் உள் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அந்த மாவட்ட நிர்வாக அதிகாரி டாக்டர் ராஜேந்திரா தெரிவித்துள்ளார்.

இதேபோல் உடுப்பி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஷிவமொகாவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் மார்ச் 21ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் கே.எஸ்.ஆர்.பியின் 8 கம்பெனிகள், மாவட்ட ஆயுதப் படையின் 6 கம்பெனி படையினர் வரவழைக்கப் பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி லட்சுமி பிரசாத் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் பொது இடங்களில் அனைத்து வகையான போராட்டம் நடத்தவும், கொண்டாட்டத்தில் ஈடுபடவும், கூட்டம் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools