ஹீரோவாக ஆசைப்படவில்லை – ரஜினிகாந்த்

சென்னையில் கதாசிரியர் கலைஞானத்திற்கான பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சினிமாத்துறை பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ரஜினி பேசும்போது, ‘கலைஞானம் வாடகை வீட்டில் வசிக்கிறார் என்ற தகவல் எனக்கு இப்போதுதான் தெரியும். இது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அவருக்கு நானே வீடு வாங்கித் தருகிறேன். தமிழ் சினிமாவில் கதாசிரியர்களுக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும்.

கலைஞானம் பற்றி தெரியாத தயாரிப்பாளர்களோ இயக்குநர்களோ இருக்க முடியாது. கதையில் சிக்கல் ஏற்பட்டால் உடனே கலைஞானத்தை தான் அழைப்பார்கள். இயக்குநர் தயாரிப்பாளருக்கு அடுத்து கதாசிரியரின் பெயரை முன்னிலைப்படுத்தி போட வேண்டும்.

இயக்குநர் பாரதிராஜா என்னை தனிமையில் சந்திக்கும் போது தலைவர் என்று அழைப்பார். பாரதிராஜாவுக்கும், எனக்கும் கருத்துகள், எண்ணங்கள் மாறுபடலாம், ஆனால் நட்பு மாறாது.

ஹீரோவாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதில்லை, பைக், வீடு என சந்தோஷமாக இருக்க நினைத்தேன். வில்லனாக நடித்துக்கொண்டிருந்த போது திடீரென ஹீரோவாக நடிக்க அழைத்ததால் அதிர்ச்சி அடைந்தேன். பைரவி படத்தில்தான் எனக்கு முதன்முதலில் கிரேட் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. பைரவி படத்திற்குபின் நானும், கலைஞானமும் இணைந்து பணியாற்ற முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது’ என்றார்.

இந்த பாராட்டு விழாவில் கதாசிரியர் கலைஞானத்திற்கு ரஜினிகாந்த் தங்கச்சங்கிலி அணிவித்து ஆசிர்வாதம் பெற்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools