X

1 ரூபாய் கூட செலவில்லாமல் ஹனீமூன் கொண்டாடிய காஜல் அகர்வால்

ஹனிமூன் கொண்டாட மாலத்தீவு சென்றிருந்த நடிகை காஜல் அகர்வால் அதற்காக பல லட்சம் ரூபாய் செலவளித்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போதைய தகவல்படி அவர் அங்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என தெரியவந்துள்ளது. மாலத்தீவில் உள்ள சுற்றுலா தலங்களை உலகம் முழுவதும் பிரபலப்படுத்துவதற்காக ஒரு சலுகை அளிக்கப்பட்டு வருகிறதாம்.

அதன்படி இன்ஸ்டாகிராமில் 20 லட்சத்துக்கு அதிகமான பாலோவர்கள் இருப்பவர்கள், மாலத்தீவுக்கு வருகை தந்தால், அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாம். அதுவே 50 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் இருந்தால், அவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் இரண்டு ரிட்டர்ன் டிக்கெட் இலவசமாக வழங்கப்படுமாம்.

ஒரு கோடிக்கு மேல் பாலோவர்கள் இருந்தால் போகவர விமான டிக்கெட் மற்றும் உணவு, தங்குமிடம் என அனைத்துமே இலவசமாம். எதற்கும் பணம் செலுத்த தேவையில்லையாம்.

சமீபத்தில் ஹனிமூன் கொண்டாட சென்ற நடிகை காஜல் அகர்வாலும் இந்த சலுகையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. காஜல் அகர்வாலுக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு கோடிக்கும் அதிகமான பாலோவர்கள் இருப்பதால், அவர் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் ஹனிமூனை முடித்து கொண்டு நாடு திரும்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

காஜல் அகர்வால் மட்டுமின்றி நடிகைகள் சமந்தா, பிரனிதா, வேதிகா, ரகுல் பிரித் சிங் உள்பட பல நடிகைகள் இந்த சலுகையின் அடிப்படையில் தான் மாலத்தீவு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சலுகையை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நிபந்தனையும் விதிக்கப்படுகிறதாம்.

அது என்னவெனில், மாலத்தீவில் தாங்கள் விதவிதமாக புகைப்படம் எடுத்து தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய வேண்டும் என்பது தானாம். மேற்கண்ட நடிகைகள் அனைவரும் மாலத்தீவு சென்றபோது தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பலனாக மாலத்தீவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம்.