சிவகங்கை மாவட்டம் கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்வதற்கு இந்தியத் தொல்லியல் துறை (ASI) அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. இது சங்க கால தமிழர்களின் நாகரிகத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
10ம் கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் தமிழ்நாடு தொல்லியல் துறை சமர்ப்பித்ததை அடுத்து 11ம் கட்ட அகழாய்விற்கு அனுமதி வழங்கியது. கீழடியில் இதுவரை 4 சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 11-ம் கட்ட ஆய்வு மூலம் வைகை நதிக்கரை நாகரிகத்தின் எஞ்சிய ரகசியங்களை வெளிக்கொணரத் திட்டமிடப்பட்டுள்ளது.
கீழடி மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய பகுதிகளிலும் விரிவான ஆய்வுகள் தொடர வாய்ப்புள்ளது. இதுவரை நடைபெற்ற 10 கட்ட அகழாய்வுகளில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜனவரியில் திறந்தவெளி அருங்காட்சியகம் திறக்கப்பட்ட பிறகு பணிகள் தொடங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.