X

சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 1600 சிறப்பு பேருந்துகள்!

வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களையொட்டி அரசு போக்குவரத்துத்துறை சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன்படி, இன்று முகூர்த்த நாள் மற்றும் 15,16,17 ஆகிய தேதிகள் வார விடுமுறை நாட்களை முன்னுட்டு, சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 80 பேருந்துகளும், நாளை (மே 15) 620 பேருந்துகளும், 16 ஆம் தேதியன்று 655 பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் 120 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரத்தில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் 25 பேருந்துகளும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வார இறுதியில் இன்று 5676 பயணிகளும், நாளை 10,853 பயணிகளும், சனிக்கிழமையன்று 821 பயணிகளும், ஞாயிற்றுக்கிழமை 9759 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.