22வது காமன்வெல்த் போட்டி நாளை தொடங்குகிறது

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1930-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டை போல காமன்வெல்த் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக காமன் வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் 2018-ம் ஆண்டு நடந்தது. இதில் ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது.

22-வது காமன்வெல்த் விளையாட்டு இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நாளை (28-ந்தேதி) தொடங்குகிறது. ஆகஸ்ட் 8 -ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து , நியூசிலாந்து, வேல்ஸ், கென்யா, நைஜீரியா உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5054 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

நீச்சல், தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், பளுதூக்குதல், டேபிள் டென்னிஸ், ஜிம்னாஸ்டிக் உள்பட 20 விளையாட்டுகள் 280 பிரிவுகளில் நடக்கிறது. காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் 111 வீரர்கள், 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 பேர் 16 விளையாட்டுகளில் கலந்து கொள்கிறார்கள்.

தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், (மகளிர்), சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஆக்கி, ஜூடோ, லான் பவுல்ஸ், பாரா பவர்லிப்டிங், ஸ்கு வாஷ், நீச்சல், டேபிள் டென்னிஸ், டிரையத்லான், பளு தூக்குதல், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளில் இந்தியர்கள் பங்கேற்கின்றனர்.

கடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம் , 20 வெள்ளி, 20 வெண்கலம் ஆக மொத்தம் 66 பதக்கம் பெற்று 3-வது இடத்தை பிடித்தது. இந்த முறை அதைவிட கூடுதலாக பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பி.வி சிந்து , மீராபாய் சானு, ரவி தஹியா , மாணிக் பத்ரா, லவ்லினா, நிகத் ஜரின் உள்ளிட்டோர் பதக்கம் வெல்வார்கள் என்று கருதப்படுகிறது. ஆக்கியிலும், மகளிர் கிரிக்கெட்டிலும் வாய்ப்பு உள்ளது. ஒலிம்பிக் சாம்பியனும், உலக சாம்பியனுமான நீரஜ் சோப்ரா காயத்தால் கடைசி நேரத்தில் விலகி உள்ளார். துப்பாக்கி சுடுதல் போட்டி இல்லாதது இந்தியாவுக்கு பாதிப்பே. நாளை தொடக்க விழா நிகழ்ச்சி மட்டுமே நடக்கிறது. 29-ந்தேதியில் இருந்து போட்டிகள் ஆரம்பமாகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools