செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே கன்னிவாக்கம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (33), ஜெயசித்ரா (29) தம்பதியினருக்கு இரண்டரை வயது சிறுமி ஜெயஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு அவர்கள் இரவு தூங்க சென்றனர். அந்த பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக இருந்ததால் கொசுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டு தூங்கி உள்ளனர்.
நள்ளிரவில் கொசுவர்த்தி சுருள் துணிகள் (அ) எளிதில் தீப்பற்றக்கூடிய ஏதோ ஒரு பொருளின் மீது விழுந்ததில் வீட்டில் தீ பரவியது. தீ வீடு முழுவதும் பரவிய நிலையில் புகையினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்நிலையில் பார்த்திபன், ஜெயசித்ரா மற்றும் குழந்தை ஜெயஸ்ரீ 3 பேரும் உயிரிழந்தனர்.
அதிகாலையில் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறுவதை கண்ட அக்கம்பக்கத்தினர் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் தீ விபத்தில் 3 பேரும் உயிரிழந்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மீட்கப்பட்ட 3 உடல்களும் பிரேத பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.