X

தமிழ்நாடு தற்காப்புக்கலை விளையாட்டு பேரவையின் சார்பில் நடத்தப்பட்ட 3 வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி!

தமிழர்களின் தொன்மையான பாரம்பரிய வீரக்கலையான சிலம்பக்கலையை இளம் தலைமுறையினரிடையே வளர்க்கும் நோக்கில், தமிழ்நாடு தற்காப்புக்கலை விளையாட்டு பேரவையின் சார்பில் நடைபெற்ற 3வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி 2026–27 சிறப்பாக நடைபெற்றது.

சென்னை மேலக்கோட்டையூரில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து சிலம்ப வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டிகளில் மினி சப்-ஜூனியர், சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் மாணவ, மாணவியர்கள், ஆடவர் மற்றும் மகளிர் பங்கேற்றனர். வயது மற்றும் பிரிவு வாரியாக நடைபெற்ற போட்டிகளில் வீரர்கள் தங்களது வேகம், காலடி நுட்பம், சுழற்சி, உடல் சமநிலை மற்றும் மன ஒருமைப்பாடு ஆகிய திறன்களை சிறப்பாக வெளிப்படுத்தினர்.

இப்போட்டி மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே உடல் வலிமை, தன்னம்பிக்கை, ஒழுக்கம், மனக்கட்டுப்பாடு மற்றும் தற்காப்புத் திறன் ஆகியவற்றை வளர்ப்பதுடன், தமிழர்களின் பாரம்பரிய வீரக்கலையான சிலம்பத்தை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் முயற்சியும் முன்னெடுக்கப்பட்டது.

போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற வீரர்களை அமைப்பின் நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்தினர்.
சிலம்பக் கலையின் வளர்ச்சிக்காக தொடர்ந்து போட்டிகள், பயிற்சி முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம், சிலம்பத்தை மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் மேலும் வளர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

நிகழ்வை சிறப்பாக நடத்த ஒத்துழைத்த தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக நிர்வாகம், பயிற்சியாளர்கள், நடுவர்கள், பெற்றோர்கள், வீரர்–வீராங்கனைகள் மற்றும் அனைத்து ஒத்துழைப்பாளர்களுக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்தனர்.