X

50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு தான் அதிக வாய்ப்பு – பிரட் லீ கருத்து

Indian cricket captain Rohit Sharma celebrates after scoring 100 runs during the Asia Cup 2018 cricket match between India and Pakistan at Dubai International cricket stadium,Dubai, United Arab Emirates. 09-23-2018 (Photo by Tharaka Basnayaka/NurPhoto via Getty Images)

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பையை வெல்வதற்காக தற்போது அனைத்து அணிகளும் முழுஅளவில் தயாராகி வருகின்றன. 13-வது முறையாக நடைபெறவுள்ள இந்த 50 ஓவர் உலகக்கோப்பை அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 1987, 1996 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் ஐசிசி-யின் 50 உலகக் கோப்பை தொடரானது நடைபெற்றது. அதில் 2011-ஆம் ஆண்டு டோனியின் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற பல ஐசிசி தொடர்களை இந்திய அணி இழந்த வேளையில் தற்போது இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்காக முனைப்பு காட்டி வருகிறது.

மேலும் இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த அனைத்து தொடர்களிலும் இந்திய அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் வேளையில் இந்த ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது என்பது குறித்து பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது கணிப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உலக கோப்பையை இந்திய அணிதான் வெல்லும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிரட் லீ கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

இந்திய அணி தற்போது மிகச் சிறப்பான அணியாக உள்ளது. அந்த அணியில் அனுபவமும் இளமையும் கலந்துள்ளது. அதுமட்டும் இன்றி இந்திய மைதானத்தில் இந்திய அணியை வீழ்த்துவது என்பது சவாலான காரியம். இங்குள்ள மைதானங்கள் அனைத்தும் இந்திய அணிக்கு ரொம்பவே பழக்கப்பட்டவை என்பதனால் இந்திய அணிக்கு இந்த தொடரை வெல்ல அதிக வாய்ப்பு என்று எந்தவித தயக்கமும் இன்றி பிரெட் லீ தெரிவித்துள்ளார்.