8 ஆண்டுகளில் பா.ஜ.க என்ன செய்தது என்பதை விளக்கிட வேண்டும் – சீமான் பேச்சு

குடிநீர், வேளாண்மை, சுற்றுச்சூழல் ஆகியவற்றை காக்க உழவர்களின் கோரிக்கையை ஏற்று கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூரில் நடைபெற்றது.

அப்போது சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் முடிவை தமிழக அரசு நிரந்தரமாக கைவிட வேண்டும்.விவசாய மக்களின் எதிர்ப்பை மீறி கான்கிரீட் தளம் அமைக்க கூடாது.கான்கிரீட் தளம் அமைத்தால் நிலத்தடி நீர் மற்றும் சிறு உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் இதை தனி தீர்மானமாக கொண்டு வந்து தடுத்திட வேண்டும். விவசாயிகளிடம் கருத்து கேட்பதாக பா.ஜ.க.வினர் கூறி வருவது வேடிக்கையான விஷயம். கடந்த ஒரு வருடத்தில் தி.மு.க. எதையும் செய்ய வில்லை என குற்றம் சாட்டும் பா.ஜ.க. 8 ஆண்டுகளில் என்ன செய்தது என்பதை விளக்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools