X

9 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் நடிக்கும் ஓவியா

கேரளாவை சேர்ந்த ஓவியா, மலையாள திரையுலகில்தான் அறிமுகமானார். அங்கு அவர் மூன்று படங்கள் நடித்தபின்தான் தமிழில் நாளை நமதே என்ற படத்தில் நடித்தார். விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்ற ஓவியாவை தமிழ்நாட்டு மக்கள் முழுவதும் கொண்டாடி தீர்த்தது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம்தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா அளவுக்கு பிரபலமானது யாரும் இல்லை என்று சொல்லலாம். ஆனால் அதில் கிடைத்த அறிமுகத்தைக்கொண்டு பலரும் திரைத்துறை வாய்ப்புகளை பெற்ற நிலையில், தனக்கு வந்த வாய்ப்புகளையும் ஏற்க மறுத்தார் ஓவியா. வாய்ப்புகள் வருகின்றன என்பதற்காக படங்களில் நடிப்பதைவிட மனதுக்குப் பிடித்தால் மட்டுமே ஒப்புக்கொள்வேன் என இருந்தார்.

இடையில் கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துவந்த ஓவியா 2011-ம் ஆண்டுக்கு பின் தாய்மொழியான மலையாளத்தில் ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை. தற்போது ஒன்பது ஆண்டுகள் கழித்து மலையாளப் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். “எனக்கு இது அறிமுகப்படம் போல உள்ளது. இங்கு யாருக்கும் என்னைத் தெரியாது” என்று பேட்டியில் கூறியுள்ளார்.