X

‘அர்ஜுன் ரெட்டி’ ஹீரோவுக்கு ஆறுதல் கூறிய சூர்யா!

அர்ஜுன் ரெட்டி தெலுங்குப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. தமிழ் மட்டுமின்றி, இந்தியிலும் அர்ஜுன் ரெட்டி ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதன்பிறகு அவர் நடித்த கீதா கோவிந்தம் படமும் வெற்றி பெற்றது.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியான நோட்டா படமும் ஓரளவு வரவேற்பை பெற்றது. தற்போது டாக்சிவாலா என்ற படத்தில் நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படம் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானது.

படம் ரிலீசுக்கு முன்பே இணையத்தில் வெளியானதால், படக்குழுவினர் மட்டுமின்றி, தென்னிந்திய திரையுலகமே அதிர்ச்சிக்குள்ளானது. இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக விஜய் தேவரகொண்டா “நான் சோர்வடையும் போதெல்லாம் என்னை உற்சாகப்படுத்துவது யார் தெரியுமா? நீங்கள் தான். எல்லா கூச்சல்களுக்கு நடுவிலும், உங்கள் அன்பு எனக்கு சத்தமாகக் கேட்கிறது” என ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.

அதை ரீ டுவீட் செய்துள்ள நடிகர் சூர்யா, “எங்கள் அனைவரின் அன்பும் உங்களுக்குண்டு. இதுவும் கடந்து போகும். ஆனால், நீங்கள் இங்கு நிலைத்திருக்கப் போகிறீர்கள். டாக்சிவாலா படத்தை எதிர் நோக்குகிறேன்” என ஆறுதல் தரும் வகையில் கூறியுள்ளார்.