அங்கீகரிக்கப்பட்ட சுகாதார அமைப்புகளின் கூட்டமைப்பு (CAHO) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தியாவின் முன்னணி சுகாதாரத் தர மாநாடான ‘கஹோகான் (CAHOCON) 2026’-இன் 10-வது பதிப்பை, இந்தியாவின் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு இன்று சென்னை மாநகரில் தொடங்கி வைத்தார்.
2026. ஏப்ரல் 10 முதல் 12, வரை நடைபெற உள்ள இம்மாநாட்டில், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சிறப்பான அறிவியல் அமர்வுகள், சிந்தனையைத் தூண்டும் குழு விவாதங்கள், புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சிகள் இடம்பெறுகின்றன. பிற பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடி தொடர்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை வழங்கும் தளமாகவும் இம்மாநாடு திகழ்கிறது. புதுமையான திட்டங்களை முன்னிலைப்படுத்தி அறிவுப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் சுவரொட்டி விளக்கக்காட்சிகளும் இம்மாநாட்டில் இடம்பெறுகின்றன.
அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் சங்கீதா ரெட்டி இம்மாநாட்டில் முதன்மை உரை நிகழ்த்தினார். சுகாதாரப் பராமரிப்பு தரத்திற்கான சர்வதேச சங்கத்தின் (ISQua) தலைவரும் மற்றும் அதன் இயக்குனர்கள் குழு உறுப்பினருமான டாக்டர் எசக்கியேல் கார்சியா எலோரியோ சிறப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினரான திரு. வெங்கையா நாயுடு ஆற்றிய உரையில், “அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவச் சிகிச்சை, முடிந்தவரை எவ்விதக் கட்டணமுமின்றி கிடைப்பதை உறுதிசெய்யவும், மற்றும் குறிப்பாக கிராமப்புறங்களில் வலுவான சுகாதார உட்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் அரசாங்கங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக காப்பீட்டுத் திட்டங்கள் மக்களை சென்றடைவதில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தபோதிலும், கணிசமான நோயாளிகள் இன்னும் மருத்துவச் செலவுகளுக்கு காப்பீடு பாதுகாப்பின்றி தங்கள் சொந்த பணத்தையே நம்பியிருக்கும் நிலை இருப்பது, ஒரு முக்கிய கவலையாகவே தொடர்கிறது. மருத்துவச் சேவைகளை அணுகுவதிலும், அதனைப் பெறுவதற்கான கட்டணங்களிலும் உள்ள இடைவெளிகளைக் குறைத்து, சுகாதாரச் சேவைகளை மிகவும் திறமையாகவும் பரவலாகவும் வழங்குவதற்கு அரசு-தனியார் கூட்டாண்மைக்கு பெரும் வாய்ப்பு உள்ளது. அதே வேளையில், சேவையின் வீச்சை விரிவுபடுத்தவும், நோயறிதலை மேம்படுத்தவும், நோயாளிகளுக்கான சிகிச்சை பலன்களைச் சிறப்பாக்கவும் மருத்துவர்கள் செயற்கை நுண்ணறிவை தங்களது செயல்பாட்டில் இணைப்பதும் அதனை சிறப்பாக பயன்படுத்துவதும் அவசியமாகும். நோய் வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி, சமூக அளவில் விழிப்புணர்வை வலுப்படுத்துவதும் சமஅளவில் முக்கியமானது; நீண்ட கால அடிப்படையில், அதிகரித்து வரும் வாழ்க்கை முறை நோய்களின் பெரும் சுமையைக் குறைப்பதில் சமூகத்தில் அதிக விழிப்புணர்வு முக்கியப் பங்கு வகிக்கும்” என்று குறிப்பிட்டார்.
CAHO அமைப்பின் தலைவர் டாக்டர் விஜய் அகர்வால் மற்றும் பொதுச் செயலாளர் டாக்டர் லல்லு ஜோசப் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் சிறப்புரையாற்றினர். CAHOCON 2026 மாநாட்டின் அமைப்புக்குழு தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி வரவேற்புரையாற்றினார். அமைப்புக் குழுவின் இணைத்தலைவர் டாக்டர் எஸ் மணிவண்ணன் மாநாட்டின் மையக்கருத்தை விளக்கி விரிவாக எடுத்துரைத்தார். அமைப்புக் குழுவின் செயலாளர் டாக்டர் சதீஷ் தேவதாஸ் தொடக்கவிழா நிகழ்வில் நன்றியுரை ஆற்றினார்.
நோயாளிகளின் பாதுகாப்பு, சுகாதாரத் தரம், அங்கீகாரம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் குறித்த முன்னேற்றங்கள் பற்றி விவாதிக்க நடைபெறும் CAHOCON 2026 மாநாடு, மருத்துவர்கள், நிர்வாகிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உட்பட 2,500 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் நிகழ்வாக நடைபெறுகிறது. 200-க்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் இதில் பங்கேற்பது, இம்மாநாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இந்த மாநாட்டு நிகழ்வுடன் இணைந்து முன்னணி மருத்துவ உபகரண உற்பத்தியாளர்கள், டிஜிட்டல் சுகாதார நிறுவனங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் அதிநவீன தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விளக்கிக்கூறும் 200-க்கும் மேற்பட்ட அரங்குகளைக் கொண்ட மிகப்பெரிய சுகாதார கண்காட்சியும் நடைபெறுகிறது.
சிறு குழு விவாதங்கள், ஊடாடும் பயிலரங்குகள் மற்றும் கவனமுடன் கற்கும் அமர்வுகள் ஆகியவற்றை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல பிரத்யேக அமர்வுகளும் இம்மாநாட்டில் இடம்பெறுகின்றன. சென்னையைச் சேர்ந்த 32 முன்னணி மருத்துவமனைகளின் ஈடுபாட்டுடன் உள்ளடக்கிய 40-க்கும் மேற்பட்ட பயிலரங்குகள் மாநாட்டுக்கு முன்நிகழ்வுகளாக நடத்தப்பட்டன. இதில் பங்கேற்பாளர்களுக்குத் தர மேம்பாடு மற்றும் நோயாளிகள் பாதுகாப்பு குறித்த செய்முறைப் பயிற்சியும், நடைமுறைக்கு உகந்த உத்திகளும் கற்பிக்கப்பட்டன.
தொடக்க விழா நிகழ்வில் மாநாட்டுச் சிறப்பு மலர், கல்வி சார்ந்த வெளியீடுகள் மற்றும் அறிவியல் இதழ்கள் வெளியிடப்பட்டன. அத்துடன், சுகாதார சிகிச்சைக்கான இடர்வாய்ப்பைக் கையாள்வதில் முதிர்ச்சி மற்றும் சிறந்த தரநிலைகள், லேப்ராஸ்கோபிக் செயல்முறை மேலாண்மை, மருந்தக நிர்வாகம், மறுவாழ்வு செயல்பாடு மற்றும் நோயாளிக்குத் தோழமையான மருத்துவமனை நிர்வாகம் உள்ளிட்ட புதிய கல்வித்திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டன.
மனித வளம், நோய்த்தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மற்றும் தொழில்சார் சுகாதாரம் போன்ற துறைகளில் தர மேம்பாட்டிற்கான மையங்கள் மற்றும் புதிய CAHO மன்றங்கள் தொடங்கப்படுவதான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. சுகாதாரத்துறையில் சிறந்த நிர்வாக நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காக CAHO மற்றும் இந்திய மேலாண்மைக் கழகம் – ஜம்மு (IIM Jammu) இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
தெற்காசியாவிற்கான முதல் ISQua பிராந்திய மாநாடாக ISQua அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ள CAHOCON 2026 மாநாட்டில், 20 ISQua நிபுணர்கள் உரையாற்றுகின்றனர். சுகாதாரத் தரநிலைகளை மேம்படுத்துவதில் சிறந்த பங்களிப்பை வழங்கிய நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களை அங்கீகரித்துப் பாராட்டும் விதமாக, சுகாதார சிகிச்சையில் தரம் மற்றும் நோயாளிகள் பாதுகாப்பில் சிறந்து விளங்குபவர்களை மதிப்புமிக்க CAHO விருதுகள் மூலம் இம்மாநாடு கௌரவிக்கும்.