சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த 10வது, 11வது நடைமேடையில் பணிகள் தொடங்கி இருப்பதால் கடந்த 20-ந்தேதியில் இருந்து 5 மற்றும் 6-வது நடைமேடையில் இருந்து மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இதன் காரணமாக சேவைகளும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 நாட்களாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பொதுமக்கள் சிரமங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று ரெயில்வே துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. புறநகர் மின்சார ரெயில் பயணிகள் வசதிக்காக மாநகரப் போக்குவரத்து கழகம் கூடுதலாக பஸ் சேவை அளிக்கிறது. குறிப்பாக எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் ரெயில் சேவை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் காரணமாக 204-ஆக இருந்த ரெயில் சேவைகள் 164-ஆக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 115-ஆக மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எழும்பூர்- பரங்கிமலை, எழும்பூர்- கூடுவாஞ்சேரி, எழும்பூர்- செங்கல்பட்டு இடையே கட் சர்வீஸ் ரெயில்கள் இயக்கப்படும் எனவும் ரெயில்வே அறிவித்துள்ளது. எழும்பூரில் இருந்து செல்லும் ரெயில்கள் சேத்துபட்டு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் நிற்காது. எழும்பூருக்கு வரும் போது பல்லாவரம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துபட்டில் நிற்காது. வார நாட்களில் இயக்கப்படும் கும்மிடிப்பூண்டி- தாம்பரம் ரெயில் செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.