X

காமன்வெல்த் வாள் சண்டை – தமிழக வீராங்கனை பவானி தேவி சாதனை வெற்றி

காமன்வெல்த் வாள் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெராவில் நடைபெற்று வருகிறது. இதன் சீனியர் ‘சேபர்’ பிரிவில் சென்னையை சேர்ந்த சிஏ பவானி தேவி பங்கேற்றார்.

அவர் கால்இறுதியில் ஆஸ்திரேலியா வீராங்கனை கெய்ட்லினை 15-3 என்ற கணக்கிலும், அரை இறுதியில் ஸ்காட்லாந்தை சேர்ந்த காட்ரியோனாங்கை 15-5 என்ற கணக்கிலும் எளிதில் வீழ்த்தினார்.

இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த எமிலி ராக்சுடன் மோதினார். உலகின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான எமியை 15-12 என்ற கணக்கில் வீழ்த்தி தமிழக வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்றார். இதன்மூலம் காமன்வெல்த் வாள்சண்டையில் சீனியர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பவானிதேவி படைத்தார்.

பவானிதேவி இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐஸ்லாந்தில் நடைபெற்ற சேட்லைட் காமன்வெல்த்தில் வெள்ளிப்பதக்கமும், கடந்த ஆண்டு உலககோப்பை சேட்லைட் போட்டியில் தங்கப்பதக்கமும் பெற்று இருந்தார். தமிழகத்துக்கு பெருமை சேர்த்த அவருக்கு பாராட்டுகள் குவிகிறது.

Tags: sports news