X

நேபாள வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 500 ஆக உயர்வு – மீட்புப் பணிகள் தீவிரம்!

திபெத்தின் லெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், போடே கோஷி நதி வழியாக நேபாளத்தின் மத்திய மாவட்டங்களுக்குள் புதன்கிழமை புகுந்து பேரழிவை விளைவித்தது. திபெத்தையொட்டிய ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி நதியில் முதலில் பெருக்கெடுத்த வெள்ளம், பின்னா் திரிசூலி, நாராயணி நதிகளிலும் பாய்ந்ததால், நுவாகோட், தாடிங் உள்பட பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தன. பலத்த உயிா்ச் சேதம் மற்றும் பொருட்சேதத்துடன், நேபாளம் கடந்த பல்லாண்டுகளில் காணாத மிக மோசமான இயற்கைப் பேரிடராக இது மாறியுள்ளது.

வெள்ளத்தால் புரட்டிபோடப்பட்ட ரசுவா, நுவாகோட், தாடிங், சிட்வான் உள்ளிட்ட மாவட்டங்களில் நேபாள ராணுவம் மற்றும் பிற முகமையினா் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சகதி குவியலிலிருந்து தோண்ட தோண்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்தோா் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை 500-ஐ கடந்தது.

திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு ஆன்மிக யாத்திரை சென்ற 288 இந்தியர்கள் உள்பட 1000-க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர். வெள்ளத்தில் தகவல் தொடர்பு கட்டமைப்பு முற்றிலும் சிதைந்திருக்கும் நிலையில், யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காணாமல் போனவர்களின் நிலையை அறிய முடியவில்லை. மேலும், இந்தியர்கள் உள்பட காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நேபாள தேசிய பேரிடா் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.