X

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி – பாகிஸ்தான் வெற்றி

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி அபு தாபியில் நேற்று நடைபெற்றது.

டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாபர் அசாம் சிறப்பாக ஆடி அரை சதமடித்து 68 ரன்களில் அவுட்டானார். அவருக்கு அடுத்தபடியாக மொகமது ஹபீஸ் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை

இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா சார்பில் பில்லி ஸ்டான்லேக், ஆண்ட்ரூ டை ஆகியோர் 3 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. ஆனால் அவர்களுக்கு பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.

இதனால் ஆஸ்திரேலிய அணி 22 ரன்களை எடுப்பதற்குள் முன்னணியில் உள்ள 6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.
அதன்பின் வந்த வீரர்கள் ஓரளவு தாக்குப் பிடித்தனர். நாதன் கால்டர் நீல் மடடும் அதிகமாக 34 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 16.5 ஓவரில் 89 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பரிதாபமாக தோற்றது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.