ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ‘ஷஹீத் ஸ்மாரக்’ பகுதியில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் திரண்டு நடத்திய போராட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
‘காக்ரோச் ஜனதா கட்சி’ (Cockroach Janta Party – CJP) அமைப்பின் நிறுவனரான அபிஜீத் திப்கே, அங்கு திரண்டிருந்த ஆதரவாளர்களின் தோள்களின் மீது அமர்ந்து மேடையை நோக்கிச் சென்றபோது, கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள் திடீரென அவரை அடுத்தடுத்து கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியதைத் தொடர்ந்து, அங்கிருந்த திப்கேவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய இளைஞர்களைப் பிடித்துத் தாக்கத் தொடங்கினர்.
உடனே பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்ததோடு, தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களைக் கைது செய்து தற்காப்புக் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.