X

சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் சரணடைந்தனர்

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 2பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் இன்று தங்களது ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்தனர். நக்சலைட்டுகளின் தெற்கு பஸ்தர் பிரிவின் கிஸ்தாரம் பகுதி குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களான இவர்கள் மாநிலத்தின் ‘பூனா மார்கம்’ (புனர்வாழ்வு) திட்டத்தின் கீழ் சரணடைந்தனர் என்று பஸ்தர் காவல்துறைத் தலைவர் சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, மாநில அரசின் சரணடைதல் மற்றும் புனர்வாழ்வுக் கொள்கையால் தாங்கள் ஈர்க்கப்பட்டதாக அந்த நக்சலைட்டுகள் தெரிவித்தனர் என்று கூறினார். சரணடைந்தவர்களில் சோதி ஜோகா பற்றி தகவல் தெரிவித்தால் ரூ. 5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. டபார் கங்கா மாட்கம் கங்கா, சோதி ராஜே மற்றும் மாட்வி புதாரி ஆகியோர் மீது தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.