தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகளை முறையாகப் பின்பற்றுவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், தலைமை தாங்கி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
ஆட்சியர் வழங்கிய முக்கிய அறிவுரைகள்: தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தொடங்கப்பட்ட திட்டங்களைத் தொடரலாம். வெள்ளம், வறட்சி போன்ற பேரிடர் கால நிவாரணப் பணிகளுக்குத் தடையில்லை.
பொதுக்கூட்டங்கள்: மைதானங்கள் மற்றும் கூட்ட அரங்குகள் அனைத்துக் கட்சிகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும். கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு இடம், நேரம் குறித்து முன்கூட்டியே காவல் துறையிடம் அனுமதி பெற வேண்டும்.
வாக்காளர் அடையாளச் சீட்டு: தேர்தல் நாளன்று வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் ஸ்லிப்களில் (Booth Slips) கட்சிப் பெயர், வேட்பாளர் பெயர் அல்லது சின்னம் ஆகியவை இடம் பெறக் கூடாது.
பிரச்சாரக் கட்டுப்பாடுகள்: மத வழிபாட்டுத் தலங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது.
சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வகையிலோ அல்லது தனிநபர் விமர்சனங்களிலோ ஈடுபடக் கூடாது.
வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பே அனைத்துப் பிரச்சாரங்களும் முடிக்கப்பட வேண்டும்.
வெளிநபர்கள் வெளியேற்றம்: பிரச்சாரக் காலம் முடிந்தவுடன், அந்தத் தொகுதியின் வாக்காளர் அல்லாத வெளிநபர்கள் அனைவரும் உடனடியாகத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
ஆயுதங்கள் மற்றும் ஊர்வலங்கள்: ஊர்வலங்களில் ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது. ஒலிப்பெருக்கி பயன்பாடு மற்றும் வாகனத் தொடரணிகள் (Convoy) தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி மட்டுமே இருக்க வேண்டும்.
தேர்தல் தொடர்பான புகார்களைத் தேர்தல் ஆணையம் அல்லது நியமிக்கப்பட்ட பார்வையாளர்களிடம் தெரிவிக்கலாம் என்றும், அமைதியான முறையில் தேர்தல் நடைபெற அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உஷா (விளாத்திகுளம்), மி. பிரபு (தூத்துக்குடி), ரா. கௌதம் (திருச்செந்தூர்), செந்தில்வேல் முருகன் (திருவைகுண்டம்), சுப்புலட்சுமி (ஓட்டப்பிடாரம்), ஹிமான்ஷீ மங்கள் (கோவில்பட்டி), ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கல்யாணக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், திமுக சார்பில் ஆனந்தசேகரன், அக்னல், அதிமுக சார்பில் சரவணபெருமாள், முனியசாமி, காங்கிரஸ் சார்பில் ராஜாராம், பாஜக சார்பில் பிரபு, வீரமணி, தேமுதிக சார்பில் முத்துமாரி, துரைராஜ், விசிக சார்பில் விமல் வங்காளியார், சு. ராஜ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சுபேந்திரன், செல்வராஜ், சிபிஐ (எம்) சார்பில் ராஜா மற்றும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் சுப்பிரமணியன் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் திரளாகப் பங்கேற்றனர்.