X

சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதற்கிடையே வடகிழக்கு பருவமழையின் முதல் சூறாவளியாக அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாக உருவாகி உள்ளது. இந்த புயலுக்கு சக்தி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை இலங்கை பரிந்துரைத்தது.

இந்த தாழ்வு பகுதி குஜராத்தின் துவார்காவில் இருந்து சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில், வடமேற்கு திசையில் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது தீவிர புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த புயல் நாளைக்குள் வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடலில் மத்திய பகுதிகளை அடைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

வானிலை மையத்தின் தகவலின்படி இந்த புயல் கேரளாவை நோக்கி நகராது. அது கடலுக்குள் மேற்கே நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படு கிறது. இதனால் கடலோர பகுதிகளில் மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும். கடலுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே வங்க கடலில் உருவான மற்றொரு தாழ்வு பகுதி ஒடிசா மாநிலத்தில் கோபால்பூரை ஒட்டிய பகுதியில் தீவிரமாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் ஒடிசாவின் உள்பகுதிகளையும், வடக்கு திசையில் சத்தீஸ்கரையும் தாக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சக்தி புயல் காரணமாக இன்று தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிபேட்டை, வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்கில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், சில சமயங்களில் தீவிரமடையலாம் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.