நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும், தங்கள் வங்கிகளின் விதிகளை இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கைக்கு ஏற்றவாறு அவ்வப்போது மாற்றி அதனை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கனரா, பஞ்சாப் நேஷனல் வங்கிகள் மினிமம் பேலன்ஸை உயர்த்தியது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஐ.சி.ஐ.சி.ஐ-யில் புதிய கணக்கு தொடங்குபவர்களின் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர மினிமம் பேலன்ஸ் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், நகர்ப்புற, மெட்ரோ பகுதிகளுக்கு ரூ.50 ஆயிரமாகவும், இதுவே சிறு நகரங்களுக்கு ரூ.25 ஆயிரம், கிராமப்புற பகுதிகளுக்கு ரூ.10ஆயிரமாகவும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உயர்த்தி உள்ளது.
இந்த விதிகள் கடந்த 1-ந்தேதியில் இருந்து புதிதாக கணக்கு தொடங்குபவர்களுக்கு பொருந்தும் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பழைய MAMB தொடரும் என அறிவித்துள்ளது. பண பரிவர்த்தனைகளுக்கான சேவைக் கட்டணங்களையும் வங்கி மாற்றியுள்ளது. கிளைகள் மற்றும் பண மறுசுழற்சி இயந்திரங்களில் பண வைப்புகளுக்கு, வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்கு மூன்று இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படும். அதன் பிறகு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.150 வசூலிக்கப்படும்.