X

சென்னை பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டியுள்ள கடலோர சதுப்புநிலங்களை சீரமைக்கும் ஐசிஐசிஐ அறக்கட்டளை!

சமூகப் பொறுப்புணர்வுடன், நிலையான வளர்ச்சியை உறுதிசெய்தல்’ (‘Being Responsible, Being Sustainable’) என்ற தனது தாரக மந்திரத்தைக் கொண்டு செயல்பட்டு வரும், ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) 2026 நிதியாண்டில் சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொறுப்புகளுக்கான தனது பங்களிப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. வங்கியின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதிப் பங்களிப்பு (CSR Spend), 2025 நிதியாண்டிலிருந்த ₹8.01 பில்லியனில் இருந்து 2026 நிதியாண்டில் ₹9.94 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சீரமைப்பு, வாழ்வாதார மேம்பாடு மற்றும் சமூக வளர்ச்சி ஆகிய நான்கு முதன்மைத் துறைகளில் செலவிடப்படுகிறது. இதில் குறிப்பாக, காலநிலை மாற்றத்தின் சவால்களைச் சந்தித்து வரும் கடலோரப் பகுதிகளில், சுற்றுச்சூழலைச் சீரமைக்கும் பணிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

ஐசிஐசிஐ வங்கியின் சிஎஸ்ஆர் அமைப்பான ஐசிஐசிஐ அறக்கட்டளை (ICICI Foundation), தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து சென்னை மாவட்டத்தில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டி 20,000 அலையாத்தி (மாங்ரோவ்) மரக்கன்றுகளை நட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இக்கால்வாய், சென்னை வழியாக சுமார் 800 கிலோமீட்டர் தூரம் செல்கிறது. தற்போதைய நிலையில் இது பெருமளவில் பயன்படுத்த முடியாத நிலையிலும், மிகக் கடுமையாக பாதிப்படைந்தும் காணப்படுகிறது. சீரழிந்துள்ள கடலோரச் சதுப்புநிலங்களை மீட்டெடுப்பதும், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் புலம்பெயரும் பறவைகளின் வாழிடங்களை மேம்படுத்துவதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இப்பணியில் ஐந்து வகையான உள்ளூர் அலையாத்தி தாவர இனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மரக்கன்றுகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு ஏதுவாக, 80 துணைக் கால்வாய்களுடன் கூடிய எட்டு ‘மீன் முள்’ (fishbone) வடிவ நடுகை அமைப்புகளை ஐசிஐசிஐ அறக்கட்டளை உருவாக்கியுள்ளது. இயற்கை முறையில் நீர் பாயும் அமைப்பைப் பிரதிபலிக்கும் இக்கால்வாய்கள், நீரோட்டத்தை சீராக்கி மண்ணின் உவர் தன்மையைக் குறைக்கின்றன. ‘மீன் முள்’ முறை என்பது குறைந்த செலவிலான, சூழலுக்கு உகந்த அலையாத்தி காடுகளைச் சீரமைக்கும் தொழில்நுட்பமாகும். இதில் அமைக்கப்படும் கால்வாய் வலைப்பின்னல்கள், இயற்கை அலைக்கரைகளைப் போல் செயல்பட்டு, உவர்ப்புத் தன்மையுள்ள கடல் அலைநீரைச் சீரழிந்த கடலோர நிலங்களுக்குக் கொண்டு சேர்க்கின்றன.

இத்திட்டத்தின் மூலம் கிழக்குக் கடற்கரையை ஒட்டி 50 ஏக்கர் பரப்பளவில் அலையாத்திக் காடுகளின் பரப்பளவு அதிகரிக்கப்படுகிறது. மேலும், இது கார்பன் உறிஞ்சுதலுக்கு உதவுவதுடன், ஆக்கிரமிப்புத் தாவரங்களை அகற்றி, தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் கடல் பறவைகளின் வாழ்வியலுக்கு ஆதரவாக அமைகிறது. புயல் மற்றும் வெள்ளப் பெருக்குகளை அடிக்கடி சந்திக்கும் சென்னை மாநகரத்திற்கு, சீரமைக்கப்பட்ட இந்த அலையாத்திக் காடுகள் புயல் அலைகளுக்கு எதிரான இயற்கை அரணாகச் செயல்படுகின்றன.

பக்கிங்ஹாம் கால்வாய் திட்டம் என்பது நாடு முழுவதும் ஐசிஐசிஐ அறக்கட்டளை மேற்கொண்டு வரும் விரிவான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். இதுவரை, 21 மாநிலங்களில் உள்ள 83 காடுகள் மற்றும் புலிகள் காப்பகங்களில் வனப் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர்ப் பெருக்கப் பணிகளுக்கு அறக்கட்டளை ஆதரவு அளித்துள்ளது. 2022 நிதியாண்டில் இருந்து 5 மில்லியனுக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளதோடு, ஆண்டிற்கு 34.37 பில்லியன் லிட்டர் நீர் மறுஊட்டம் மற்றும் சேமிப்புத் திறனையும் உருவாக்கியுள்ளது. 2026 நிதியாண்டில் மட்டுமே, 86,600 மரங்களை நட்டு, 490 மில்லியன் லிட்டர் நீர் மறுஊட்டம் மற்றும் சேமிப்புத் திறனை உருவாக்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக, மார்ச் 31, 2026 வரை, ஐசிஐசிஐ அறக்கட்டளையின் இத்தகைய சமூகப் பணிகளால் இந்தியா முழுவதும் 19.83 மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளனர்.