கர்நாடகாவில் மொத்தம் உள்ள 6000 கிராம பஞ்சாயத்து அலுவலகங்களுக்கும் மகாத்மா காந்தியின் பெயரைச் சூட்ட காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டதில் (MGNREGA) மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, விதிகளில் திருத்தம் செய்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதை கண்டித்து நேற்று கர்நாடகாவில் ஆளுநர் மாளிகை நோக்கி நடந்த பேரணியில் அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதலவர் டி.கே. சிவக்குமார் கலந்துகொண்டனர். அப்போது, 6000 கிராம பஞ்சாயத்து அலுவலகங்களுக்கும் மகாத்மா காந்தியின் பெயரைச் சூடும் அரசின் முடிவை அவர்கள் அறிவித்தனர்.
மத்திய அரசு இத்திட்டத்திற்கு 90% நிதி வழங்கிய நிலையில், தற்போது புதிய முறையின்படி மாநிலங்கள் 40% நிதி வழங்க வேண்டும் என மாற்றப்பட்டுள்ளதற்கு அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், இந்தத் திட்டம் தொடர்பான விவாதத்திற்காகச் சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.