X

தமிழ்நாட்டில் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு!

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 60-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஆண்டுக்கு இரு முறை கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம்.

வாகனங்களுக்கு ஏற்ப ஒரு வழிப் பயணம் மற்றும் மாதாந்திரக் கட்டணம் ரூ. 5 முதல் ரூ. 735 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, செங்குறிச்சி, வாலாஜாபாத், சமயபுரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் வாகன வகையைப் பொறுத்து ரூ.5 முதல் ரூ.20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

லாரிக்கு ரூ.380 சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், ரூ.20 வரை உயர்த்தப்பட்டு ரூ. 400 ஆக வசூலிக்கப்படுகிறது. பேருந்துக்கு சுங்கக் கட்டணம் ரூ. 240-லிருந்து ரூ. 250-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒருமுறை பயணிக்கும் லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு தற்போது வசூல் செய்யப்படும் கட்டணத்தில் இருந்து ரூ.10, ஒரே நாளில் பலமுறை பயணிக்கும் லாரி, பேருந்துகளுக்கு தற்போது வசூல் செய்யப்படும் கட்டணத்தில் இருந்து ரூ.15 உயர்த்தி வசூல் செய்யப்படுகிறது.